News Article : Dinamalar
புதுச்சேரி : புதுச்சேரி அருகே ஓட்டல் ஒன்றில், திருக்குறள் ஒப்புவித்தால் போதும், குடும்பத்திற்கே, 'மெகா' அசைவ விருந்து படைத்து அசத்துகின்றனர்.
உலக பொது மறையாக விளங்கும் திருக்குறளின் புகழை மங்காமல் பாதுகாக்க, தமிழ் ஆர்வலர்கள் பலரும், பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டுள்ளனர். அந்த வகையில், பொதுமக்களிடையே திருக்குறளை எளிதாக கொண்டு சேர்க்கும் புதுமையான முயற்சியில், புதுச்சேரியைச் சேர்ந்த சமையல் கலை வல்லுனரான, நிருபன் ஞானபானு இறங்கிஉள்ளார்.
புதுச்சேரி அடுத்துள்ள கரிக்கலாம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த இவர், அமெரிக்காவில் உள்ள ஓட்டல்களில், சமையல் கலைஞராக பணிபுரிந்து உள்ளார். புதுச்சேரி - கடலுார் சாலையில், நோணாங்குப்பம் பகுதியில், கீற்று கொட்டகையில், இயற்கை சூழலுடன், ஜல்லிக்கட்டு என்ற பெயரில் ஓட்டல் ஒன்றை துவக்கியுள்ளார்.
தமிழ் மீது பற்று கொண்ட, நிருபன் ஞானபானு, திருக்குறளின் புகழை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில், தன் ஓட்டலுக்கு வரும் எவரும், 100 திருக்குறளை ஒப்புவித்தால், இலவசமாக மெகா அசைவ விருந்து வழங்குகிறார். விருந்தில், மட்டன் பிரியாணி, சிக்கன் பிரியாணி, காடை வறுவல், இறால் தொக்கு, நண்டு வறுவல், வஞ்சிரம் மீன் வறுவல் என, 21 வகை உணவுகள் இடம் பெறுகின்றன.
குழந்தைகள் மற்றும் பள்ளி மாணவர்கள் திருக்குறளை ஒப்புவித்தால், தங்கள் குடும்பத்தோடு இலவசமாக அசைவ விருந்தை சாப்பிட்டு மகிழலாம். நிருபன் ஞானபானுவின் இந்த புது முயற்சிக்கு, பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
Source : https://www.dinamalar.com
Commentaires